Tuesday, 31 January 2017

யமலோகத்துக்கு ஒரு சுற்றுலா! ஒரு கதை ஒரு நீதி

‘நாம் செய்வது யாருக்குத் தெரியப் போகிறது?’ இந்த நினைப்புக்கூட, மற்றவர்களுக்கு தீமை செய்து துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஒருவருக்குத் தோற்றுவித்துவிடும். மற்றவரைத் துன்புறுத்திப் பார்க்கும் குரூர புத்திக்கு இறைவன் என்றும் துணை போவதே இல்லை. மாறாக, தர்மம், அந்த எண்ணத்துக்கான தண்டனையை உடனே தயார் செய்து வைத்துவிடுகிறது. உரிய நேரம் வரும்போது, தீமை செய்தவனுக்கான தண்டனையை அள்ளிக் கொடுக்கிறது. ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு’ என்கிறது திருக்குறள். அதாவது, `ஒருவர் மறந்தும்கூட மற்றவருக்குத் தீமை செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால், அறக் கடவுளே அவனுக்குத் தீமையைத் தர எண்ணிவிடும்’ என்பது இதன் அர்த்தம். இந்த நீதியை விளக்கிச் சொல்கிறது நம் புராணக் கதை ஒன்று. 

ஒரு நீதி
யமலோகம். யாருமே எட்டிப் பார்க்க விரும்பாத ஓர் இடம். கருடபுராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தாலும்கூட, அங்கு மனிதர்களின் பாவங்களுக்குத் தரப்படும் தண்டனைகளும், நரகத்தின் சூழலும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட யமலோகத்தைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டார் ரிஷி சிலாதர். அவருடைய இயற்பெயர் வேறாக இருக்க, `சிலாதர்’ என்ற காரணப் பெயர் வருவதற்கு அந்தச் சம்பவமே காரணமாகிவிட்டது. 
சில முனிவர்களுக்கு மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்யும் வல்லமை உண்டு. அதை தபோ பலம், யோக சக்தி என்பார்கள். ரிஷி சிலாதருக்கும் அது உண்டு. யமலோகத்துக்குப் போனார். முற்றும் துறந்தவர்; வரம் கொடுக்கவும் சாபம் கொடுக்கவுமான சக்தி படைத்தவர்; யமதர்மனும், சித்ரகுப்தனும், யம தூதர்களும் அவரை வணங்கி, வரவேற்றார்கள்; அவருக்கான பணிவிடைகளைச் செய்தார்கள்; உபசரித்தார்கள்.  

“முனிவரே! ஏது இவ்வளவு தூரம்? யமலோகத்தின் அன்றாடப் பணிகளைப் பார்வையிட வந்திருக்கிறீர்களா?’’ வெகு பவ்யத்தோடு கேட்டான் யமதர்மன். 

“அப்படிக் காரண, காரியங்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ தோன்றியது, கிளம்பி வந்துவிட்டேன்... ஏன் யமதர்மா! நான் இங்கே வந்ததில் உனக்கு ஏதாவது சிரமம் நேர்ந்ததா?’’ 

யமலோகம்
“அபசாரம்... அபசாரம்... தெரியாமல் கேட்டுவிட்டேன். முனிபுங்கவரே... இது உங்கள் இல்லம். மூவுலகமும் உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு உடைமை. ரிஷிகளும் தவசீலர்களும் இருப்பதால்தான் இயற்கை செழிக்கிறது... எல்லாக் காரியங்களும் எல்லா இடங்களிலும் தர்மப்படி நடைபெறுகின்றன. தர்மம் தழைத்தோங்க வழிசெய்யும் உங்களுக்குத் தடை சொல்லத் துணிவானா இந்த யமதர்மன்? எப்போது வேண்டுமானாலும் தாங்கள் இங்கே வரலாம். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என ஆணையிடுங்கள் மாகானுபாவரே... செய்வதற்குச் சித்தமாக இருக்கிறேன்.’’ 
முனிவர் இதழ்களில் மென்நகை எழுந்து மிளிர்ந்தது. யமனின் சபையை தன் கண்களால் சுற்றிப் பார்த்தார். தண்டனை பெறக் காத்திருக்கும் மனித ஆத்மாக்களின் வரிசை நீண்டு நின்றுகொண்டிருந்தது. சித்ரகுப்தனின் முன்னே மனிதர்களின் பாவங்களின் பட்டியலைக் காட்டும் மந்திரப் புத்தகம் விரிந்து கிடந்தது. பாவாத்மாக்களை களத்துக்கு அழைத்துப்போக, யம கிங்கரர்கள் தத்தம் கொடூர ஆயுதங்களுடன் ஆயத்த நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள். யமதர்மனின் ஆசனத்துக்கு முன்னே அவனுடைய எருமை வாகனம் அசையாமல் சிலைபோல நின்றிருந்தது. யமனின் ஆசனத்துக்குப் பக்கத்தில் பாசக் கயிறு அடுத்து யாரிடம் வீசப்படப்போகிறோமோ என்கிற நினைப்பில் சுருண்டு படுத்திருந்தது. 
“ஒன்றும் வேண்டாம் யமதர்மா! எனக்கு யமலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு நீ வரவேண்டிய அவசியம் இல்லை. உன் தர்ம காரியத்துக்கு இடையூறாக நான் இருக்க மாட்டேன். வேறு யாரையேனும் அனுப்பு!’’ 
யமதர்மன் கண் ஜாடைகாட்ட, சித்ரகுப்தன் எழுந்து வந்தான். ரிஷி யமனிடம் விடைபெற்று நடக்க, அவரோடு வழிகாட்டியபடியே இணைந்து நடந்தான் சித்ரகுப்தன்.
யமலோகம் யமலோகம்

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  
மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார். 
இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர். 
“இது என்ன... கற்பாறை?” 
“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’ 
“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’ 
''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.
அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  
தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். 

முக்தி பெறுதல்
“யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’ 
முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார். 
எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது. 

உங்களுக்குள்ளும் இருக்கிறான் ஒரு தலைவன்!

உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...? 
நிதானமாக யோசியுங்கள். யோசித்தீர்களா? 
இப்பொழுது இன்னொரு கேள்வி 'எல்லோரையும் விட கடுமையாகத்தான் உழைக்கிறோம். ஆனால் எங்கே தவறு செய்கிறோம்.. எது நம்மிடம் இல்லை?' என்பது போன்ற கேள்விகள் உங்களைத் துரத்தி இருக்கிறதா இதோ இந்த குறிப்புகள் உங்களுக்காகத் தான்.
1. ஒரு தலைவனின் அடிப்படைக் குணமே ஒரு குழுவை எப்போதும் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதுதான். அப்படியான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் பொழுது அதை சரியான முறையில் செய்திருக்கிறீர்களா? செய்திருந்தால், ஒரு தலைவன் அங்கேயே வெளிப்பட்டிருப்பான்.
2. உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்களில் ஒருவருக்கோ ஏதேனும் அவசரத் தருணத்தில் அவர் திட்டமிட்ட வேலையை சரியாக செய்ய முடியாமல் போகிறது. அந்த வேலையை நீங்களாகவே கேட்டு செய்து கொடுத்து இருக்கிறீர்களா? தலைவனின் பண்பு தலைமை தாங்குவது மட்டும்தான் என்றில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவ்வப்போது உதவி, அவர்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்வதும் தான். அதே நேரத்தில் அவர்களாகவே செய்து முடியக்கூடிய வேலைகளை, அவர்களைக் கொண்டே செய்ய வைக்க வேண்டும்.
3. உங்கள் குழுவுக்கு தொடர்ந்து தோல்விகள். உங்களிடம் அதற்கான காரணம் கேட்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? காரணங்களைச் அடுக்குவீர்களா, அல்லது அதற்கான தீர்வுகளோடும் செல்வீர்களா? தீர்வுகளோடும் செல்பவராக இருந்தால் நிர்வாகத்தின் முதல் சாய்ஸ் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
4. நீங்கள் அதிகமாக கோபப்படுபவரா? யாரேனும் சிறு தவறு செய்து விட்டால் கூட, அவர்களை கடுமையாகத் திட்டி நல்வழிப்படுத்த வேண்டும் என நினைப்பவரா. அப்படி ஒரு குணம் உங்களிடம் இருந்தால் அதை இப்பொழுதிலிருந்தே மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
5. ஒரு தலைவனுக்கு தன் குழுவை வழிநடத்திச் செல்வதைப்பற்றி தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல உங்கள் இலக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பதும் ரொம்ப முக்கியம். இலக்கில்லாமல் பயணிப்பது தலைவனுக்கு அழகல்ல!
6. "எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்லும்" என்பதைப்போல எப்படியும் வெற்றி கிடைத்து விடும்.. இவ்வளவு பேர் கடினமாக உழைக்கிறோமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு தலைவன் சரியாகத் திட்டமிட்டு வேலைகளை பிரித்துக் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.
7. எப்பொழுதும் தனியாக முடிவெடுப்பவராக அல்லாமல். தன் குழுவினரின் கருத்துகளையும் கேட்டறிந்து நல்ல தீர்வுகளை முன்னெடுப்பவரே நல்ல தலைவனாக உருவெடுக்கிறான்.         ‘
நீங்கள் தொண்டனா, தலைவனா?’ என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது. இரண்டு சாய்ஸ்கள் , முடிவு உங்கள் கையில். இந்த இறுதி வரிகளை படிக்கும் முன்பு நீங்கள் முடிவெடுத்திருந்தால்..
யெஸ் பாஸ்...!  உங்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்!   

பிராத்தனைகளை விட வலிமையானது பொறுமை! - புத்தரின் உபதேசம்

ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து  சென்றுகொண்டிருந்தார். அந்த ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். வெகு தூரம் நடந்து வந்ததால், ஆற்றங்கரையை அடைந்தபோது, அனைவரும் களைபுற்றிருந்தனர். அதனால், சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்ல முடிவு செய்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரை அருகே, ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர்.

புத்தர்  

அப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரை அனுப்பி வைத்தார். உடனே ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர், அப்போதுதான் அவருக்கு முன்பாக ஒரு  மாட்டு வண்டி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கியிருந்தது. இந்த விஷயம் சீடருக்குத் தெரியாது. தண்ணீர் கலங்கி இருந்தது கண்டு, இந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு குடிக்க கொடுப்பது என்று யோசித்த சீடர், மீண்டும் புத்தரிடம் வந்து "அந்த ஆற்று நீர் குடிப்பதற்கு உகந்தாக இல்லை குருவே!..." என்றார்.

"இல்லை, இல்லை... அது அப்படி இருக்காது, நீ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வா..." என்றார் புத்தர்
புத்தரின் உபதேசம்
"நாம்தான் சரியாக கவனிக்கவில்லையோ! குருவே சொல்லி விட்டார்; அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். வீணாக நேரத்தைக் கழிப்பதை விட, அவர் சொல்வது போல மீண்டும் பார்த்து விடலாம்" என்று முடிவு செய்து கொண்டு, உடனே ஆற்றைநோக்கி விரைந்தார். 
ஆனால் ஆறு அப்போதும் கலங்கிய நிலையில்தான் இருந்தது. எனவே இம்முறை போன வேகத்திலேயே திரும்பி வந்த சீடர், "ஆற்று நீர் குடிப்பதற்கு ஏற்றதாகத் தெரியவில்லை குருவே" என்றார்.
"ஓ.. அப்படியா... உன்னை ஓய்வெடுத்து விட்டு சிறிது நேரம் கழித்துதானே கிளம்பச் சொன்னேன். நீ ஏன் உடனே கிளம்பினாய்?'' என்றார்.
''இல்லை!... குருவே, தாங்கள் அதிக தாகத்தோடு இருந்தீர்கள்!,  அதேபோல் உறுதியாகச் சொன்னதால் எதற்காக தாமதிக்க வேண்டும் என்று உடனே சென்றேன். ஆனால் நான் பார்த்தவரையில் அது முற்றிலும் குடிப்பதற்கான தண்ணீர் அல்ல'' என்றார் சீடர்.
"இல்லை, நீ சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து, ஓய்வெடுத்து விட்டு, இன்னும் ஒருமுறை சென்று பார்த்து வா" என்றார்.
"குருவிற்கு நம் மீது நம்பிக்கையில்லை போலும்;  சரி அவருக்காக ஒரு தடவை போய்த்தான் பார்த்து விட்டு வருவமே " என்று அந்த சீடர் நினைத்து கொண்டார். 

சிறிது நேரம் கடந்த பின்பு, கிளம்பிச் சென்ற சீடர் இந்த முறை ஆற்று நீர் தெளிவாக இருந்தைக் கண்டார். மிகவும் மகிழ்ச்சியடைந்த சீடர் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.  
கொண்டு வந்த தண்ணீரை புத்தரிடம் கொடுத்தார். அவரும் குடித்து முடித்தார்.  பின், மெதுவாக அந்த சீடர்  "குருவே, ஒரு சிறிய சந்தேகம் கேட்கலாமா..."  என்று பணிந்து கேட்டார்.
"நிச்சயமாக, கேள்" என்றார் புத்தர்பெருமான்.
புத்தர் 

"அழுக்கான ஆற்று நீர், எப்படி மிகவும் நன்றாகவும் தெளிவாக மாறியது; இது மந்திரத்தை நானும் கற்றுக்கொள்ளலாமா குருவே!" என்று பணிவுடன் கேட்டார்.   

சிறிய புன்னகையுடன்  புத்தர் "அப்படி ஒன்றும் மாயாஜலம் எதுவும் நிகழ்த்தப்படவில்லை'' என்று கூறியவர் தொடர்ந்து சீடருக்கு அது பற்றி விளக்கத் துவங்கினார்
''நீ தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆற்றுக்குச் செல்வதற்கு முன்பு ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்து சென்றிருந்தது. அதனால்தான் ஆற்றுநீர் கலங்கிவிட்டது. மேலும் நான் தண்ணீர் கேட்டபோது, எனக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நீ பதற்றத்துடன் சென்றதால், உன்னால் ஆற்றுநீர் கலங்கி இருப்பதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. கலங்கிய நீரை போன்றுதான் மனமும், அதாவது, குழம்பிய நீர்  எப்படி குடிக்க ஏற்றதாக இருக்காதோ, அதுபோல குழப்பமான மனநிலை முடிவெடுக்க ஏற்றதல்ல. எனவே ஒரு முடிவை அவசர கதியில்  எடுப்பதோ, கோபத்தில் எடுப்பதோ தவறாகவே முடியும்'' என்று போதித்தார். 
மேலும்,  ''இது போலத்தான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும்போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளிவடையும். சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அது தானாக அமைதியடையும். பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்'' என்றார்.
இதையே 'பிராத்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமைதான்' என்ற புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழியும் உணர்த்துகிறது. 

கவனித்தல் மேதையாக்கும்! ஒரு கதை ஒரு நீதி - 2

‘கற்க கசடற’ என்கிறது திருக்குறள். கவனித்தல், கல்விக்கு அத்தனை முக்கியம். கல்வி, கலைகள், பயிற்சிகள்... எதுவாகவும் இருக்கட்டும். கூர்ந்து கவனித்துக் கற்பவன் மட்டுமே அதில் மேதையாக முடியும்; சாதனை புரியவும் முடியும். அதற்கு உதாரணம், அர்ஜூனன். ‘வில்லுக்கு விஜயன்’ எனப் பெயர் எடுத்தவன்... குரு துரோணாச்சாரியாரின் அன்புக்கு பாத்திரமானவன்... அவரின் அத்யந்த சிஷ்யன். அதனாலேயே பலரின் காழ்ப்புக்கும், சிலரின் வெறுப்புக்கும் ஆளானவன். ஒருவன் திறமைசாலியாக மிளிர கவனித்தல் திறன் எவ்வளவு அவசியம் என்பதை துரோணர், மற்றவர்களுக்கு உணர்த்திய சம்பவம் ஒன்று உண்டு. 
கவனித்தல்
அது, துரோணருடன் வனத்தில் இருந்த ஆசிரமத்தில் தங்கியிருந்து கௌரவர்களும் பாண்டவர்களும் அப்பியாசம் (பயிற்சி பெறுதல்) பெற்றுக்கொண்டிருந்த காலம். அங்கே வேறு சில அரச குமாரர்களும் வித்தைகள் கற்க வந்திருந்தார்கள். அஸ்திரப் பயிற்சிகளை தம் மாணவர்களுக்கு குரு துரோணர் கற்றுக்கொடுக்கும் பாங்கே அலாதியானது. ஆசிரமத்திலிருந்து மாணவர்களை வெகுதூரம் அழைத்துச் செல்வார். இருந்திருந்தாற்போல் எதையாவது சொல்வார். அவர் சொன்னதை அப்படியே பின்பற்றினால், கற்றுத் தேறிவிடலாம்.  
அன்றைக்கும் அப்படித்தான். தன் சிஷ்யர்களுடன் அடர்ந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தார் துரோணர். உச்சிப்பொழுது நெருங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மேல் இருந்த பறவைகள் மனிதர்களின் பெருத்த காலடியோசையில் அதிர்ந்து பறந்து, திரும்ப வந்து அமர்ந்தன. அணில்கள் கிளைவிட்டுக் கிளைக்குத் தாவிக் குதித்து ஓடின. புதர்களில் பதுங்கியிருந்த சிறு முயல்கள் பதறி, குதித்து ஓடின. மாணவர்களுக்கு எல்லையில்லாக் களைப்பு. அன்றைக்கு ஆதவனின் வெப்பம், வனத்தின் குளுமையையும் நீர்த்துப் போகச் செய்திருந்தது. பலருக்கும் வியர்க்கத் தொடங்கியிருந்தது. 
ஓர் இடத்தில் நின்றார் துரோணர். மாணவர்களும் தேங்கி நின்றார்கள். தன் பார்வையை மாணவர்களின் மேல் அலையவிட்டார். ஓர் இடத்தில் நிலைகொண்டது அவர் பார்வை. குறிப்பறிந்து, முன்னால் வந்து நின்றான் அர்ஜூனன். 
``காண்டீபா...! வெகு தாகமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?’’
``ஆணையிடுங்கள் குருதேவா!’’ 
``ஆசிரமத்தைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். அங்கு போய் நீர் கொணர்வது சாத்தியமில்லாதது. நாம் வரும் வழியில் எங்கோ ஒரு நீர்நிலை இருந்ததாக நினைவு...’’ 
``ஆம் குருவே! இதோ அருகேதான்... ஒரு காத தூரம்கூட இருக்காது.’’ 
``அப்படியானால் ஒன்று செய்! அந்தத் தடாகத்துக்குப் போ! எனக்கு நீர் கொண்டு வா!’’ 
அர்ஜூனன் குருவைப் பணிந்து வணங்கினான். துரோணரின் நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டான். வந்த வழியே திரும்பி நடந்தான். 
அர்ஜூனன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், துரோணர் மாணவர்களை நோக்கித் திரும்பினார். 
``பீமா! அஸ்திரப் பயிற்சியை ஆரம்பிக்கலாமா?’’ 
பீமன் வாயைத் திறக்கக்கூட இல்லை.
``அர்ஜூனன் இல்லாமலா?’’ கேட்டது துரியோதனன். 
துரோணர், துரியோதனனை வெறித்துப் பார்த்தார். 
``பரவாயில்லை துரியோதனா... அதனால் என்ன?’’ 
துரியோதனனிடம் இருந்து மறுபேச்சு வரவில்லை. துரோணருக்கு துரியோதனனின் மனநிலை நன்கு தெரியும். 
‘அர்ஜூனனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என நினைக்கிறான். என் பிரியத்துக்கு உரியவன் என்பதாலேயே, சிறப்பு கவனம் கொடுத்து அனைத்தையும் கற்றுக் கொடுப்பதாக எண்ணுகிறான். அது தவறு என்பதை உணரச் செய்ய வேண்டும்...’ யோசனையோடு அத்தனை மாணவர்களையும் பார்த்தார் துரோணர். 
தரையில் அமர்ந்தார், ஒரு குச்சியால் மணலில் ஒரு மந்திரத்தை எழுதினார். 
``இன்றைய அஸ்திரப் பிரயோகத்துக்கான மந்திரம் இதுவே... எல்லோரும் மனனம் செய்துகொள்ளுங்கள்.`` 
சீடர்கள் முன்னே வந்தார்கள். துரோணர் உரக்க அந்த மந்திரத்தை ஒருமுறை சொன்னார். மந்திரத்தை மாணவர்கள் உள்வாங்கிக்கொண்டார்கள். திரும்ப அவர் எழுதி வைத்ததைப் படித்து உறுதி செய்துகொண்டார்கள். குருதேவர் சற்று அவகாசம் கொடுத்தார். 
``என்ன ஆயிற்றா?’’ 
``முடிந்தது குரு தேவா!’’ மாணவர்களின் குரல்கள் ஒருசேர ஒலித்தன. 
``துரியோதனா உன் தனுசைக் கொடு!’’ 
கவனித்தல்
துரியோதனன் பவ்யத்தோடு தன் வில்லை நீட்டினான். துரோணர், அவராகவே அவனுடைய அம்புராத்தூளியிலிருந்து ஓர் அம்பை எடுத்தார். வில்லில் நாண் ஏற்றினார். 
``இப்போது மனதுக்குள் அந்த மந்திரத்தைச் சொல்லி பாணத்தை விட வேண்டும். என்ன நடக்கிறதென்று பாருங்கள்!’’ 
அங்கே நடந்தது மாயாஜாலம். துரோணர் விட்ட அம்பு, எதிரே இருந்த ஆல மரத்தை நோக்கிப் போனது. சில விநாடிகள்தான். மரத்தில் இருந்த அத்தனை இலைகளிலும், ஒன்றுவிடாமல் துளையிட்டது. சரியாக ஓர் இலையில் ஒரு துளை! பிறகு, துரோணரிடமே திரும்பி வந்தது.
மாணவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். அந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்பத் தங்களுக்குள் சொல்லி மனனம் செய்துகொண்டார்கள். 
``மேலே செல்லலாமா?’’ 
துரியோதனன், குருவிடம் இருந்து வில்லையும் அம்பையும் வாங்கிக்கொண்டான். எல்லோரும் குருவின் பின்னே நடந்தார்கள்.  
*** 
அப்போது, அர்ஜூனன் குடுவையில் நீரை நிரப்பிக்கொண்டு துரோணரும் மற்றவர்களும் சென்ற பாதையில் வந்துகொண்டிருந்தான். குருவும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தபோது துரோணர் மணலில் கிறுக்கியிருந்த மந்திரத்தைப் பார்த்தான்; படித்தான்; தன் காண்டீபத்தை எடுத்தான்; மந்திரத்தைச் சொல்லி அம்பு தொடுத்தான். அது துரோணர் விட்டதைப்போலவே ஆல மரத்தை நோக்கிப் பறந்தது. எல்லா இலைகளிலும் சில விநாடிகளில் மற்றொரு துளையைப் போட்டுவிட்டுத் திரும்பி வந்தது. 
அர்ஜூனன் திருப்தியோடு, குருவைத் தேடிப் போனான்.
*** 
கவனித்தல் - பறக்கும் அம்பு
எல்லோரும் அன்றைய பயிற்சி முடிந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அர்ஜூனன் கொண்டு வந்து தந்திருந்த நீர் அவர்களின் தாகத்தைத் தணித்திருந்தது. பழைய இடத்துக்கு வந்தபோது, அனைவரின் கண்களும் துரோணர் அம்புவிட்ட மரத்தில் நிலைகுத்தி நின்றன. துரியோதனனின் விழிகள் ஆச்சர்யத்தால் விரிந்தன. 
``குரு தேவரே! தாங்கள், மரத்தின் இலைகளில் ஓர் துளைதானே இட்டிருந்தீர்கள்... இந்த மர இலைகளில் மற்றொரு துளையும் சேர்ந்திருக்கிறதே!’’ 
``இன்னுமா உனக்குப் புரியவில்லை. இது அர்ஜூனன் எய்த அம்பில் விளைந்தது.’’
``அது எப்படி? நீங்கள் இதைக் கற்றுக் கொடுத்தபோது அவன் இல்லையே!’’ 
``எப்படிக் கற்றாய்... நீயே சொல் அர்ஜூனா!’’ துரோணர் அர்ஜூனனை நோக்கிச் சொன்னார்.
அர்ஜூனன், மணலில் குரு எழுதிய மந்திரத்தைப் படித்ததையும், அம்பு எய்ததையும் கூறினான். 
``இப்போது புரிந்ததா? ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அர்ஜூனன். அவனுடைய கவனித்தல் திறனுக்கு இது ஒரு சான்று. இன்றைக்கு நான் அஸ்திரப் பிரயோகத்தில் ஒன்றைக் கற்றுக்கொடுப்பேன் என்றதுமே அவன் கவனம் எல்லாம் அதிலேயே குவிந்துவிட்டது. `எப்போது... எப்போது...’ என என் பயிற்சி குறித்தே யோசித்திருக்கிறான். அந்த கவனித்தல், அவனைத் தரையைப் பார்த்தபடியே நடந்துவரச் செய்திருக்கிறது. மந்திரத்தைப் பார்த்தான்... படித்தான்... கற்றான்...’’ 
எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்தல் ஒருவனை மேதையாக்கும். எந்த குருவாக இருந்தாலும், தன் சிஷ்யர்களை `கவனி... கவனி... கவனித்தல் முக்கியம்’ என அடிக்காத குறையாக வலியுறுத்துவது இதன் காரணமாகத்தான். துரியோதனன் அன்றைக்கு முக்கியமான பாடத்தைக் கற்றிருந்தான்... மண்டியிட்டு வீழ்ந்து மனதார குருவை வணங்கினான்.