Wednesday, 30 November 2016

ஒ௫ நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

*மெல்லிய புன்னகை இருக்க வேண்டும்.

*சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.
*தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும்.
*அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.
*பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும்.
*சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.
*மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
*பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும்
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
*தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.
*தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.
*ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
*எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.
*எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி,
வெறுப்பேத்தக்கூடாது.
*எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என மாணவர்களால் உணர முடியும்.
*ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது.
*படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.

சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்றுபவரே நல்லாசிரியர்: அப்துல் கலாம்

“மாணவ சமுதாயம் என்னும் துடிப்பான பறவைக் கூட்டத்தை வகுப்பறைக்குள் பூட்டி வைக்காமல் அவர்கள் சிகரங்கள் பல தாண்டி,சிக்கல் இல்லாமல் பறக்க ஆசிரியர்கள்தான் சிறகுகளாய் இருக்க வேண்டும்” என முன்னாள் குடியரசுத்தலைவரும்,விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அறிவியல் மேதை அப்துல்கலாம் அக்கல்லூரியின் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கி பேசியதாவது:
” ‘ஆசிரியர்,விஞ்ஞானி,குடியரசுத்தலைவர்’ இந்த மூன்றில் எதை உங்களது அடையாளமாக சொல்லிக் கொள்ள விரும்புவீர்கள் ?என என்னை பார்த்து ஒருமுறை ஒரு மாணவன் கேட்டான்.நான் அப்போது, ‘என்றுமே நான் ஆசிரியராகிய மாணவனாக இருக்கவே விரும்புவதாக’ சிரித்துக் கொண்டே கூறினேன்.
ஏனெனில் ,ஆசிரிய பணியைப் போன்ற மகத்தான பணி வேறெதுவுமே இல்லை. நம்மை படைத்த கடவுளுக்கும் மேலானவர் கற்பிப்பவர்.சிலி நாட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் .’உங்களுக்கு தெரிந்ததை எங்களிடம் திணிப்பதை விட்டுவிட்டு ,எங்களுக்கு தெரியாததை நீங்களும் கற்றுக் கொண்டு எங்களையும் தெரிந்து கொள்ள தூண்டுங்கள்,அப்போதுதான் கற்றலும் ,கற்பித்தலும் முழுமை பெறும்’ என ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இது தான் உண்மை.ஆனால் இந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நான் எங்கே போனாலும் மாணவர்கள்தான் எனக்கு சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்கள். ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் பரமபதத்தில் பாம்பு ஏறி செல்ல உதவும் ஏணியைப் போல்,மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தானும் வளைந்து கொடுத்து அவர்களை ஏற்றி விடும் ஏணியாக தான் இருக்க வேண்டும் என்றவர், தன் வாழ்வில் தான் ஏறி வரக் காரணமாக இருந்த தன் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரைப் பற்றி கூறத் தொடங்கினார்.
பார்த்த உடனே வணங்க தோன்றும் அளவுக்கு அறிவு உடையவர் .’பறவை எவ்வாறு பறக்கிறது’என்று அவர் அன்று எடுத்த ஒரு வகுப்புதான் இன்று என்னை ஒரு விமானியாக வானில் பறக்க செய்தது.1941ல் எனக்கு பாடம் சொல்லி தந்த அந்த ஆசிரியரை நான் இன்றும் என் வழிக்காட்டியாக நினைக்க ஒரே காரணம் அவரின் அன்பான அணுகுமுறையும் ,தெளிவான அறிவும் மட்டுமே.
அடுத்ததாக ‘மல்டிபிள் நாலேட்ஜ்’ இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசியவர், தான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிக்ஸ் படித்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

9 பேரை ஒரு குரூப்பாகக் கொண்ட நாங்கள் ஒரு ஏர்கிராஃப்ட் டிசைனிங்கிற்கு ஒன்பது மாதத்திற்குள்ளாக பிராஜெக்ட் செய்தாக வேண்டும். இதில் எட்டாவது மாதம் முடிந்தபிறகு எங்கள் டிசைனிங்கை பார்த்த புரோஃபசர் நீங்கலாம் தேற மாட்டீங்கன்னு சொல்லிவிட்டு சென்றுவிட, நாங்கள் சோர்ந்துவிடவில்லை .ஏர்கிராஃப்ட் டிசைனிங்,மானேஜ்மென்ட்,இன்டெக்ரேஷன் என எல்லா பிரிவை சேர்ந்த மாணவர்களும் எங்கள் 9 பேரில் இருந்ததால் அடுத்த ஒன்றரை மாதத்திகுள் பிராஜெக்ட்டை முடித்து, தேற மாட்டோம் என திட்டிச் சென்ற அதே ஆசிரியர் எங்களைப் பார்த்து திறமையானவர்கள்னு சொல்ல செய்தோம்.
இதற்கு ஒரே காரணம் ஏர்கிராஃப்ட்டைப் பற்றி எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் ஒன்றைத் தெரிந்து வைத்திருந்தோம். எனவே பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு ஒரு எல்லை வைத்துக் கொள்ளக் கூடாது .இந்த மாணவர்களுக்கு இதைமட்டும் தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என இருப்பது அறிவாகாது.மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவனுக்கு சிவில் என்ஜீனியரிங் பற்றியும் கொஞ்சம் அறிவாவது இருக்க வேண்டும்.வெறும் தியரியை மட்டும் முட்டி முட்டி படிக்க செய்யாமல் செய்முறை அறிவையும் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் சுயமாக,தங்களது வேலைக்காக ஒரு புராடக்ட் டிசைனிங் என வரும்போது பல்நோக்கு பார்வையுடன் செயல்பட முடியும் என்றவர், இறுதியாக ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென தன் அனுபவத்தின் வாயிலாக தான் உணர்ந்த 11 விஷயங்களை படிக்க, அதை ஆசிரியர்களும் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.
அப்துல்கலாம் பார்வையில் நல்லாசிரியர்கள்:
*கடைநிலை மாணவனையும் கரையேற்ற வேண்டும்.
*சாதி, மதம், மொழி என விருப்பு ,வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
*ஒரு ஆசிரியராக மட்டுமின்றி நல்ல அம்மாவாகவும், அப்பாவாகவும், தங்கையாகவும் அன்பாக செயல்பட வேண்டும்.
*களிமண் பதத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனையும் ஒரு நல்ல சிலையாக செதுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணரவேண்டும்!

ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும். அதற்கு தீர்வும் !

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்
Education is the most powerful weapon which you can use to change the world – Nelson Mandela.
குழந்தைகளின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதரமாய் விளங்குவது தொடக்க கல்வி ஆகும். இத்தொடக்க கல்வி தரம் உள்ளதாக இருத்தல் அவசியம் ஆகிறது. கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேற வேண்டிய திறன்களை வளர்த்தெடுப்பதும், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும்.
ஒவ்வொரு மாணவனும் தனது 5 வயது பூர்த்தி அடைந்த  நிலையில் பள்ளிக்கு வருகின்றான். இந்த பிள்ளைப்பருவத்தில் , அவனது அறிவு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. பல கேள்விகளைக் கேட்டுத் துளைப்பதும் காரணங்களை அறிய முற்படுவதும் இப்பருவத்தின் முக்கிய நடத்தை ஆகும். இக்கேள்விகளுக்கான சிந்தனைகளைத் தூண்டுவதும் பதில்களைத் தரும் விதமாக ஆசிரியர்களின் செயல்பாடுகளும், பள்ளிச் சூழலும் அமையப் பெற வேண்டும்.
குழந்தைகளின் சிந்தனைத் திறன்கள் வளர்ச்சியடைய ஆசிரியரின் ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. வகுப்பறை நிகழ்வுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க, அறிவு சார்ந்த கருத்துகள் மாணவரிடம் சென்றடைய ஆசிரியரின் மனப்பான்மை மிக முக்கியம்.
ஆசிரியர் தாம் கற்றுணர்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் சாதாரண முறையில் கொண்டு சேர்ப்பதும், படைப்பூக்க முறையில் அக்கருத்தினைச் செம்மைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் ஏற்ற உத்திகளைப் பயன்படுத்திப் பல துண்டல்கள் நிறைந்ததாகக் கொண்டு சேர்ப்பதும் அந்தந்த ஆசிரியரின் மனப்பான்மையை பொருத்தது.
 இன்று ஆசிரியரின் செயல்பாடுகள் மாணவனின் கற்றலை துலங்கச் செய்வதாக இருக்கின்றனவா என்பது பொது மக்களிடையே பெரும் கேள்வியாக இருக்கிறது! மாற்றத்தை எதிர்ப்பார்த்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே, மாற்றம் நிகழ வேண்டியது ஆசிரியரின் மனதில் தான்.
ஒவ்வொரு மாணவரும் அறிவைப் பெற, கற்றலுக்கான சூழலில் ஆசிரியரின் பணித்திறனும், ஈடுபாடும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் பணித்திறனும் ஈடுப்பாடும் அவ்வாசிரியரின் மனப்பான்மையை ஓட்டியே அமைகிறது. ஆசிரியர் தன் பணி சார்ந்த திறன் மற்றும் திறமையை வளர்த்து கொள்ள தொழில்முறை பயிற்சிகளும் அதனை சார்ந்த செயல்திறனும் முக்கியம். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர் நிலையிலிருந்து நாள்தோறும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ஆசிரியரின் தொழில் சார்ந்த திறன்களில் பாடங்கள் மற்றும் படிப்புகள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்தல், வளங்கள் நிர்வகித்தல், கற்றலை மதிப்பிடுதல் என பல இருந்தாலும், அதில் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களை புரிந்து கொள்ளாத நிலையில் தான் ஆசிரியர்களை சமுதாயம் போற்ற மறுக்கிறது.
Those who educate children well are more to be honored than they who produce them. – Aristotle.
இப்படி பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் ஆசிரியருடன் பழகுவதில் ஏதோ சிக்கல் உள்ளதாக படுகிறது! ஆசிரியர் மாணவர்கள் உறவு சரியாக இல்லாத பட்சத்தில், உளவியல் ரீதியாக சிக்கல் இருக்கும் பட்சத்தில்  மாணவர்களைப் புரிந்து கொள்ளுதல் எப்படி சாத்தியமாகும்!
இவ்வாறு வரும் செய்திகளை கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களை குறை கூறிவிடுதலும் நல்லதல்ல. ஓடிப்போதல் , அடித்தல், காயம் ஏற்படுத்துதல், மாணவர்களை கண்டு கொள்ளாது இருத்தல், பள்ளிக்கு தாமதாமாக வருதல், மாணவர் நலனில் அக்கறை கொள்ளாது இருந்தல் போன்ற செய்கைகள் தனிப்பட்ட சில மனிதர்களின் மனோவக்கிரத்தின் செயல்பாடாகும்.  ஆனால், இப்படிப்பட்டவர்கள் செய்கைகள் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் அவமானம் அடைகின்றது.
இவைகளை கருத்தில் கொள்ளும் போது இது தனிபட்ட நபர்களின் மனோவக்கிரமா? அல்லது  ஒட்டுமொத்த சமுதாயத்தின் தரவீழ்ச்சியின் வெளிப்பாடா? எனவும் சந்தேகம் கொள்ள செய்கின்றது.  இந்நிகழ்வுகளை யார் தடுக்க தவறியது? தலைமையா? இல்லை முறையான கண்காணிப்பு இன்மையா? என்ற கேள்விகளும் நம்மை மேலும் அச்சுறுத்துவதாக உள்ளன.
நான் படிக்கும் காலங்களில், சுமார் 30 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழல் இப்போது இல்லை. அப்போது குடும்ப தலைவரான அப்பா மீது பயம் கலந்த மரியாதை இருந்தது. அதேப்போல் மரியாதையை நாம் ஆசிரியர்களுக்கும் கொடுத்தோம். ஆனால், இன்று குடும்ப சூழல் மட்டுமல்ல, சமுக சூழலும் மாறி உள்ளது. மாணவர்கள் ஆசிரியரை விட தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பலம் பொருந்தியவனாக உள்ளான்.  அது மட்டுமல்லாமல் குடும்பங்களில் பணமே பிரதானமாக உள்ளது. தனிநபர் வருமானத்தை நம்பி வாழும் நிலையில் குடும்பங்களிலேயே மரியாதை என்பதும் கேள்வி குறியாக உள்ளது. இந்த சூழலில் இருந்து வரும் தற்போதைய இளம் ஆசிரியர்களிடம் நாம் உன்னதமான பண்புகளை எதிர்பார்ப்பது தவறே! அடிப்படை நடத்தை விதிகள் இன்றி பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்படுவது யாருடைய தவறு?
இன்று பள்ளிகள் ( தனியார், அரசு, அரசு நிதிஉதவி ) வீழ்ச்சி எனபது ஆசிரியர்களின் நடத்தையை முக்கிய காரணமாக கொண்டுள்ளது. பள்ளியின் வளர்ச்சி என்பது ஆசிரியர் மாணவர் உறவு நிலையின் மேம்பாட்டில் உள்ளது.
இன்று ஆசிரியர்கள் இளம் வயதில் வேலைக்கு வருகிறார்கள். சேல்ஸ் ரெப்,போலீஸ், தனியார் கம்பெனியில் கணக்கு பிள்ளை என்ற நிலையில் இருந்து பொருளாதார மேம்பாட்டிற்காக ஆசிரியர் வேலைக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு  ஆசிரியர் பணி அனுபவம் கிடையாது. வாழ்க்கை அனுபவமும் குறைவு. அவர்களுக்கு போதுமான அளவு பயிற்சி என்பது சாத்தியமில்லாதது. மூத்த ஆசிரியர்கள் வழி காட்டுதல் மிகவும் அவசியம். ஆனால் இவர்கள் எவருடனும் பழகுவதில்லை.
அதுமட்டுமல்ல, அவ்வாசிரியர்களின் குடும்ப சூழல்(பொருளாதார சூழல்)  அவ்வாசிரியர்களின் பணியினை பாதிப்பதாக உள்ளது. காலை எழுந்து குடும்பத்திற்கு வேலை பார்த்து, சோர்ந்து பள்ளிக்கு வருவதால்,, பிஞ்சு மனங்களை கையாளும் பக்குவம் இல்லாத நிலையில் தினசரி செய்திகளில் எவ்வகையிலாவது வருவது எதார்த்தமே!

பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆசிரியர் மாணவர் உறவு நிலையில் நல்ல அணுகுமுறை சாத்தியம். கிராம கல்விக் குழுவை தலைமையாசிரியர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முக்கியம்.
இவை எல்லாவற்றையும் விட அவ்வாசிரியரின் மனமாற்றம் முக்கியம்.
The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences- Rabindranath Tagore.
நல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிப்பறை, நல்ல காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகம் ஆகியவற்றை கொண்டதாகும். அதை விட முக்கியம் ஆசிரிய மாணவ நல்லுறவு ,மாணவர்கள் சுதந்திரமாக இடைவினையாற்றும் வகையில் வகுப்பறை அமைதல், குழந்தைகளின் இயல்பான திறன்களை வெளிகொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணம், ஆசிரியர் பயன்படுத்தும் புதிய உத்திகள், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடத்தைகள் ஆகியவை ஒரு பள்ளியின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன. 
மாணவர்களுக்கு தன்சுத்தம் கற்றுதருதல் மூலம் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் பட்சத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் சுமூகமா பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. பள்ளிகளில் மரம் ஊன்றுதல், தோட்டம் அமைத்தல், தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை அலங்கரித்தல் ஆகிய நிகழ்வுகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் போது மாணவர்கள் ஆசிரியருடன் இணக்கமாக பழக வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே அவர்களிடையே நல்லுறவை வளர்க்கின்றன.
பள்ளியின் மாணவர் சேர்க்கை, அன்றாட நிகழ்வுகளில் VEC, SMC ஆகியவற்றின் ஒத்துழைப்பை நாடும் போது பெற்றோர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு தருவார்கள். ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து பொறுப்பாக செயல்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு உதவ முடியும்.
பள்ளிகளில் உள்ள டிவி, டிவிடி, கணினி போன்றவற்றை மாணவர்கள் கையாள்வதற்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப அறிவு கொண்டவராக மாணவர்கள் திகழவும். ஆசிரியர் மாணவர் உறவு மேம்படவும் வாய்ப்பு பெருகுகின்றது.
மாணவர்களிடம் அகராதியை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துதல் மூலம் புதிய சொற்களை உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் கல்வி சார் செயல் வலுவடையும். 
மாணவர்கள் கதை சொல்ல அனுமதித்தல், ஓவியம் வரைய வாய்ப்பு உருவாக்கி தருதல், சமூக விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், விளயாட்டு முறை யில் கற்று தருதல், வில்லு பாட்டு மூலம் கற்பித்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் கருத்துக்கள் எண்ணங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கின்றன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்களிடம்  மரியாதையுடனும் சக மாணவர்களுடன் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக பழக வாய்ப்பை  ஏற்படுத்துகின்றது.
ஆசிரியர் மாணவர் உறவு நிலை உளவியல் சார்ந்து இருந்தாலும், அது எதார்த்தமான மரியாதையுடன் மதிப்பு மிக்கதாக அமைய வேண்டுமானல்,கல்வி குழந்தை மையமாக இயங்கு வேண்டும். வகுப்பறை செயல்பாடுகள் நிரம்பியதாக உயிரோட்டத்துடன் அமைய பெற்று, எல்லா வகுப்பறை வளங்களையும் பயன்படுத்தி கற்றுதருவதாக அமையும் பட்சத்தில் எதிர்பார்த்த நல்ல விளைவுகளை மாணவர்களிடம் உருவாக்கும். மேலும் பெற்றோர், நிர்வாகிகள்,  தலைமை வகிப்பவர்கள் ஆசிரியர்களை நன்றாக கண்காணித்து அவர்களிடம் உள்ள குறைகளை  கண்டுபிடித்து , உடனுக்குடன்  அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை செய்வதன் மூலம் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.
அகல் என்ற மின்னிதழில் வெளிவந்துள்ள கட்டுரை -ஜீலை 2015

Tuesday, 29 November 2016

மனித நேயம்

அனாதையாய்ப் பிறந்து பார் ! 
தாய் தந்தையர் அருமை புரியும் ! 
அடிமையாய் இருந்து பார் ! 
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் ! 
கடுமையாய் உழைத்துப் பார் ! 
வெற்றியின் மகிமை புரியும் ! 
அட மனிதனே ! 
இன்னுமா புரியவில்லை ? 
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் ! 
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் ! 
ஒரு முறையாவது மனித நேயத்துடன் 
வாழ்ந்து பார் !

அலேக்சான்டர் ஓர் அடிமை!!!

(போர்களத்தில் தன் குதிரையுடன் அலேக்சேன்டர்) 
[மாவீரன் அலேக்சான்டரை பற்றி கேள்வி பட்டிருப்பிங்க…. அவர் எப்படி அடிமையானாருனு கேட்கரிங்களா? அதான் கேக்குரம்ல…. விஷயத்த சொல்லுனு நீங்க வடிவேலு பானியிலெ ஏசரது புரியுதுங்க… சரி தொடர்ந்து படிங்க…..]
மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போதுத் தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து கீழிரங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், தெய்வீக ஒளியும் நிறைந்து கணப்பட்டது. (இதத்தான் சந்தரமுகி படத்துளே தேஜஸ் தெரியுதுனு சொன்னாங்க போல).
” உங்களுக்கு என்ன வேண்டுமானாழும் தருகிரேன், என்னுடன் ‘Macedonia’ வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர்.
யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாக கூறினார்.
தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலேக்சான்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார், “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலேக்சேண்டர். என் ஆனையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதை கேள்” என்றார்.
யோகியோ தைரியமாக, “உங்களால் மாயையான என் உயிரை கொல்ல முடியாது. என் உயிரை போர்த்திய உடலை மட்டுமே கொல்ல முடியும். இந்த உடல் என் உயிரை போர்த்திய ஆடைமட்டுமே”, என்று அமைதியாக கூறி மீண்டும் தொடர்ந்தார், “அரசே உண்மையில் நீங்கள் யாரென்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என் அடிமையின் அடிமை” என்று சிறிதும் தயங்காமல் புன்னகையுடன் கூறினார்.
“ஏன் அப்படி சொல்கிறாய்”, என்று கோபத்துடன் கேட்டார் அலேக்சான்டர்.
“என்னால் என் கோபத்தை கட்டுப் படுத்த முடியும், கோபம் எனது அடிமையாகும், ஆனால் நீங்களோ எழிதாக உங்கள் கோபத்திற்கு அளாகிவிடுகிறிர்கள், நீங்கள் கோபத்தின் அடிமை, அதனால்தான் உங்களை என் அடிமையின் அடிமை என்கிறேன்”, எனக் கூறினார்.  
யோகியின் போதனை அவர் தம் தவறை உணரச் செய்தது. வாயடைத்தவனாய் அங்கிருந்துச் சென்றார் அடிமையின் அடிமையான மாவீரன் அலேக்சேன்டர்.
(கோபம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க வேண்டிய உணர்ச்சி அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது பெரியோர் வாக்கு. கோபத்தத கட்டுபடுத்தி மகிழ்ச்சியான வழ்வை பெருவோம்.)

புல்லும் பாசமும்- குட்டிக் கதை

(தந்தயின் பாசம்) 
தமிழ் பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.
மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது?
ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.
மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.
ஆசிரியர்: நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ் நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.
மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.
ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?
மாணவன்: நான் புற்களை பார்த்தவரு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகயால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.
ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நன் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துற்கங்களை  பகிர்துக் கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.

Monday, 28 November 2016

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.
மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)
Tsutomu-Yamaguchi-world-war-2
அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.
9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.
இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

உலகை தலைகீழாக காணும் பெண் – வினோத நோய்

பொயன டனிலொவி (Bojana Danilovic) என்ற வினோத பெண்ணைப்பற்றியே இங்கு பார்க்கப்போகின்றோம்.
Bojana சாதாரண மனிதர்கள் போல் தோற்றமளித்தாலும், உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் விட சற்று வித்தியாசமான ஒரே பெண் இவர்தான். ஏனெனின், நாமெல்லாம் காட்சிகளை நேராக பார்க்கின்றோம். ஆனால் இவர் அனைத்து காட்சிகளையும் தலைகீழாக பார்க்கிறார்! ஆம் இவரால் எந்த காட்சிகளையும், எழுத்துக்களையும், சம்பவங்களையும் நேராக பார்க்க முடியாது. அனைத்துமே தலை கீழாகத்தான் தெரியும்!
Bojana இன் கண்களை பரிசோதித்த மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரின் கண்களில் எந்த பிழையும் இல்லை என்பதை அறிந்துகொண்டனர். Bojana இன் மூளையே இவர் பார்க்கும் காட்சிகளை தலைகீழாக புரிந்துகொள்கிறது!
சேர்பியாவைச்சேர்ந்த 28 வயதாகும் இவர் இப்போது “வேலை தேடுபவர்களுக்கு உதவும்” அமைப்பில் வேலைபார்த்துவருகிறார். இவரது அலுவலகத்தில் இவர் பயன்படுத்தும் கணினித்திரை மட்டும் தலைகீழாக இருக்கும்!
வீட்டிலும், அனைவரும் பார்வையிடும் தொலைக்காட்சியுடன் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலமாகவே இவர் திரைப்படங்களையும் நிகழ்வுகளையும் கண்டுகளிக்கிறார்.
இவரின் இக்குறைக்கு இதுவரை தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இக் குறைபாடு “spatial orientation phenomenon” என்றழைக்கப்படுகிறது.

கயிறு மூலம் நயாகரா அருவியை கடந்த முதல் மனிதன்!

ஜூன்(ஆனி) மாதம் 30 ஆம் திகதி, 1859 ஆம் ஆண்டு ஜோன் ஃப்ரோன்ஸுவ பொலொட(ன்) (Jean François Blondin) என்பவர் நயாகரா அருவி மேல் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து கடந்து சாதனை புரிந்தார்.
28/02/1824 இல் ச ஒமர் (St. Omer) ஃப்ரான்சில் பிறந்த இவர் தனது 5 வயதிருக்கும் போதே சாகாசப்பயிற்சிகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டார். ஐந்தரை வயதில் “The Boy Wonder” என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஆச்சரியங்களை ஏற்படுத்தத்தொடங்கினார்.
நீண்ட காலமாக நயாகராவை கடக்க வேண்டும் என இருந்த அவர், 1859 இல் நயாகராவை கடக்கும் போது பல அரிய செயல்களை செய்துகாட்டினார். அதாவது, அவர் கடக்கும் போது தனது மனேஜரை முதுகில் சுமந்தவாறு கடந்தது மட்டுமல்லாது, சிறிது நேரம் கண்களை மூடியும், ஒற்றைக்காலில் பயணித்தும் தனது அதீத திறமைகளை வெளிக்காட்டினார்!
இறுதியாக இறப்பதற்கு ஒருவருடம் முன்னர் கயிற்றின் மேல் சைக்கிளில் பயணித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
பல உயிராபத்து சாதனைகளை நிகழ்த்திய இவர் 19/2/1897 இல் சக்கரவை வியாதியால் இறந்தார்.

Thursday, 24 November 2016

குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. 

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. 

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. 

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது. 

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. 

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: 

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்." 

தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாகஇருப்பார்கள். 

நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து "ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?" என்று கேட்டது."

ஒரு ஆத்மா கூட இல்லை" என்றான் மீனவன்.

"நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்" என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

"அரசனுக்கு காஹா ஏன் தேவை?" மீனவன் தண்டோராவிடம் கேட்டான்."

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்" என்று கூறிய தண்டோரா. சட்டென்று "உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?" என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. "அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது" என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், "காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது" என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் "காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்" என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

"தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்" என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் "டக்... டக்". கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். "அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. "ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்" என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

Thursday, 17 November 2016

வெற்றி மொழி - அரிஸ்டாட்டில்

அரிஸ்டாட்டில் ஒரு கிரேக்க தத்துவஞானி. கவிதை, நாடகம், இசை, அரசியல் மற்றும் அறிவியல் போன்றவற்றை தனது எழுத்துகளில் பிரதிபலித்த ஒரு வல்லுனராக விளங்கினார். மேற்கத்திய தத்துவங்கள் தோன்றுவதற்கு இவரே முக்கிய காரணமானவராக கருதப்படுகிறார். இவரின் இயற்பியல் கோட்பாடுகள், பிற்காலத்திய வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்தன.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மாவீரன் அலெக்சாண்டருக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் விளங்கினார். உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலைசிறந்தவர் அரிஸ்டாட்டில்.

1. கல்வியின் வேர்கள் மிகவும் கடினமானது, ஆனால் அதன் பழம் இனிமையாது.

2. இரண்டு உடல்கள் வசிக்கும் ஒரு ஆன்மாவிற்காக உருவானதே அன்பு.

3. கலையின் நோக்கம் வெளிப்புற விஷயங்களை பிரதிபலிப்பதல்ல, உள்ளத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

4. தைரியம் இல்லாமல் உங்களால் இந்த உலகில் எதுவும் செய்ய முடியாது. மரியாதைக்கு அடுத்து மனதின் சிறந்த பண்பு இதுவே.

5. அனைவருக்கும் நண்பராக இருப்பது என்பது உண்மையில் ஒருவருக்கும் நண்பராக இல்லாததை போன்றது.

6. பைத்தியக்காரத்தனத்தின் கலவை இல்லாத ஒரு சிறந்த மேதை எவருமில்லை

7. மகிழ்ச்சியானது நம்மைப் பொருத்தே அமைகின்றது.

8. ஒரு செயலின் நல்ல தொடக்கம் அதனை பாதியளவு முடித்துவிட்டதற்கு சமம்.

9. சமமற்ற விஷயங்களை சமப்படுத்த முயற்சிப்பதே சமத்துவமின்மையின் மோசமான வடிவம்.

10. செயல்பாட்டில் ஏற்படும் மகிழ்ச்சியானது, அந்த செயலை முழுமைபெற வைக்கின்றது.

11. எந்த ஒரு பரிந்துரை கடிதத்தையும் விட சிறந்தது தனிப்பட்ட அழகே.

12. தனித்திறன் என்பது செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.

13. மனதின் ஆற்றலே வாழ்க்கையின் சாராம்சம்.

தத்துவ மேதை அரிஸ்டாட்டில்


உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலை சிறந்தவர் அரிஸ்டாட்டில் என்று குறிப்பிடுவர்.


மாசிடோனிய மன்னன் அமென்டால் என்பவனுக்கு மருத்துவராகப் பணியாற்றிய ஸ்நிக்கோ மாக்கஸ் என்பவரின் மகனாக ஸ்டஜிரா என்ற மாநிலத்தில் அரிஸ்டாட்டில் கி.மு. 384-ல் பிறந்தார்.
தந்தையிடம் மருத்துவக் கல்வியைப் பயின்று வந்தபோது கலை, தத்துவம் ஆகியவற்றிலும் அரிஸ்டாட்டில் ஈடுபாடு கொண்டார்.
சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோவின் புகழ் அப்போது மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலையும் கவர்ந்தது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றில் வல்லுனராகத் திகழ்ந்த பிளட்டோவிடம் கல்வி பயில வேண்டுமென்று அரிஸ்டாட்டில் விரும்பினார்.
ஆனால் தமது தந்தை அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்து, அந்த ஆசையை அரிஸ்டாட்டில் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டார்.
சிறிது காலத்தில் அரிஸ்டாட்டிலின் தந்தை மறைந்தார். தனது அறிவுத் தாகத்திற்கு பிளாட்டோவிடம் கல்வி பயில்வதே சிறந்தது என்று எண்ணியிருந்த அரிஸ்டாட்டில், பிளாட்டோவைச் சந்திக்க ஏதென்ஸ் நகரத்திற்குச் சென்றார்.
பிளாட்டோவைச் சந்தித்து தம்மை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி அரிஸ்டாட்டில் வேண்டினார். அரிஸ்டாட்டலின் புத்திக் கூர்மையையும், தத்துவ ஞானத்தையும் கண்டறிந்த பிளாட்டோ மகிழ்ந்தார்.
சுமார் இருபது ஆண்டுகள் அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரிலேயே தங்கி பிளாட்டோவின் மாணவராக இருந்து கல்வி பயின்றார்.
கி.மு. 347-ல் பிளாட்டோ மறைந்தார். தம் ஆசிரியர் மறைவிற்குப் பின் ஏதென்ஸ் நகரத்தில் வாழ அரிஸ்டாட்டில் விரும்பவில்லை.
சைராகஸ் மன்னன் ஹர்மியாஸ் என்பவன் அரிஸ்டாட்டிலைத் தம் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான்.
மன்னன் ஐர்மியாஸின் சகோதரி பைத்தியஸ் என்ற அழகியை அரிஸ்டாட்டில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் மன்னன் ஹரமியாஸ் மரணத்தைத் தழுவியதால் அரிஸ்டாட்டில் என்ன செய்வதென்று திகைத்தார்.
அப்போது அரிஸ்டாட்டிலின் அறிவாற்றலைக் கேள்வியுற்ற மாசிடோனியா மன்னன் பிலிப், தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க அரிஸ்டாட்டிலை அழைத்தான்.
அதனால் தாம் பிறந்த மாசிடோனியாவுக்கு அரிஸ்டாட்டில் சென்றார். மாசிடோனியாவின் மன்னரான பிலிப்பின் மகனும் எதிர்காலத்தில் மாவீரனாகத் திகழ்ந்தவனுமான அலெக்சாண்டருக்கு ஆசிரியர் பொறுப்பை அரிஸ்டாட்டில் ஏற்றார்.
பன்னிரண்டு ஆண்டுகள் அலெக்சாண்டருக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் அரிஸ்டாட்டில் செயல்பட்டார்.
விலங்குகளைப் பற்றி முதன் முதலாக ஆய்வு செய்த அறிஞர் அரிஸ்டாட்டில்; விலங்குகள் பற்றி மக்களிடமிருந்த தகவல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் அரிஸ்டாட்டில்தான்.
454 விலங்கினங்களின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் சேகரித்து, அவற்றைத் தொகுத்தவரும் அரிஸ்டாட்டில்தான். அதனால்தான் அவர் ‘விலங்கினங்களின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
அலெக்ஸாண்டர் உலகையே வெல்லும் பேரார்வம் கொண்டு படையெடுத்தான். இதில் விருப்பமில்லாத அரிஸ்டாட்டில் மீண்டும் ஏதென்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
பிதியாஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அரிஸ்டாட்டிலின் மனைவி சிறிது காலத்தில் இறந்தார். அதன்பின் ஹெர்ஃபிலிஸ் என்ற பெண்ணுடன் அரிஸ்டாட்டிலுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இந்த உறவில் பிறந்த குழந்தை நிக்கோமக்கஸ் என்று அழைக்கப்பட்டான். இவனும் சிறு வயதிலேயே மரணத்தைத் தழுவினான்.
மனிதன், இறைவன், அரசியல், என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது த்த்துவ தரிசனமாக உலகிற்கு வங்கினார் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!”
“மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச் சிந்தனையோடு வாழ வேண்டும்.”
“அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள். அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்க்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்.”
இது போன்ற கருத்துக்களை அரிஸ்டாட்டில் தமது நூல்களில் பதிவு செய்தார்.
அலெக்ஸாண்டர் மறைந்த பின் ஏதென்ஸ், நகர மக்களுக்கும் மாசிடோனியா மக்களுக்கும் பகை உணர்ச்சி வளர்ந்தது.
அரிஸ்டாட்டில் மாசிடோனியாவில் பிறந்தவர் என்பதாலும், அலெக்ஸாண்டருக்கு ஆசிரியர் என்பதாலும் எதென்ஸ் மக்களின் கோபம் அரிஸ்டாட்டில் பக்கம் திரும்பியது.
ஏதென்ஸ் இளைஞர்களைத் தவறான வழிகளில் அரிஸ்டாட்டில் அழைத்துச் செல்கிறார் என்றபொய்யான குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டது.
தமக்கும் அரசியலுக்கும் எந்தவித்த் தொடர்பும் இல்லையென்றும், அலெக்ஸாண்டர் உலக நாடுகளைக் கைப்பற்ற எண்ணம் கொண்டதும் தாம் மாசிடோனியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அரிஸ்டாட்டில் வாதாடினார்.
ஆனால் ஏதெனஸ் அரசு அரிஸ்டாட்லுக்கு மரண தண்டனை விதித்தது.
பிளாட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸூக்கும் மரண தண்டனை. பிளாட்டாவின் மாணவர் அரிஸ்டாட்டிலுக்கும் மரண தண்டனை.
இந்த ஒற்றுமையை நினைத்து நல்லவர்கள் கவலை கொண்டனர்.
ஆனால் சிலரின் உதவி கொண்டு ஏதென்ஸ் நகரைவிட்டு அரிஸ்டாட்டில் தப்பினார்.
இருப்பினும் சால்சிஸ் என்ற தீவில் கி.மு.. 322-ல் அரிஸ்டாட்டில் மரணத்தைத் தழுவினார்.