“மாணவ சமுதாயம் என்னும் துடிப்பான பறவைக் கூட்டத்தை வகுப்பறைக்குள் பூட்டி வைக்காமல் அவர்கள் சிகரங்கள் பல தாண்டி,சிக்கல் இல்லாமல் பறக்க ஆசிரியர்கள்தான் சிறகுகளாய் இருக்க வேண்டும்” என முன்னாள் குடியரசுத்தலைவரும்,விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அறிவியல் மேதை அப்துல்கலாம் அக்கல்லூரியின் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கி பேசியதாவது:
” ‘ஆசிரியர்,விஞ்ஞானி,குடியரசுத்தலைவர்’ இந்த மூன்றில் எதை உங்களது அடையாளமாக சொல்லிக் கொள்ள விரும்புவீர்கள் ?என என்னை பார்த்து ஒருமுறை ஒரு மாணவன் கேட்டான்.நான் அப்போது, ‘என்றுமே நான் ஆசிரியராகிய மாணவனாக இருக்கவே விரும்புவதாக’ சிரித்துக் கொண்டே கூறினேன்.
ஏனெனில் ,ஆசிரிய பணியைப் போன்ற மகத்தான பணி வேறெதுவுமே இல்லை. நம்மை படைத்த கடவுளுக்கும் மேலானவர் கற்பிப்பவர்.சிலி நாட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் .’உங்களுக்கு தெரிந்ததை எங்களிடம் திணிப்பதை விட்டுவிட்டு ,எங்களுக்கு தெரியாததை நீங்களும் கற்றுக் கொண்டு எங்களையும் தெரிந்து கொள்ள தூண்டுங்கள்,அப்போதுதான் கற்றலும் ,கற்பித்தலும் முழுமை பெறும்’ என ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இது தான் உண்மை.ஆனால் இந்த உண்மையை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. நான் எங்கே போனாலும் மாணவர்கள்தான் எனக்கு சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்கள். ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் பரமபதத்தில் பாம்பு ஏறி செல்ல உதவும் ஏணியைப் போல்,மாணவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தானும் வளைந்து கொடுத்து அவர்களை ஏற்றி விடும் ஏணியாக தான் இருக்க வேண்டும் என்றவர், தன் வாழ்வில் தான் ஏறி வரக் காரணமாக இருந்த தன் ஐந்தாம் வகுப்பு ஆசிரியரைப் பற்றி கூறத் தொடங்கினார்.
பார்த்த உடனே வணங்க தோன்றும் அளவுக்கு அறிவு உடையவர் .’பறவை எவ்வாறு பறக்கிறது’என்று அவர் அன்று எடுத்த ஒரு வகுப்புதான் இன்று என்னை ஒரு விமானியாக வானில் பறக்க செய்தது.1941ல் எனக்கு பாடம் சொல்லி தந்த அந்த ஆசிரியரை நான் இன்றும் என் வழிக்காட்டியாக நினைக்க ஒரே காரணம் அவரின் அன்பான அணுகுமுறையும் ,தெளிவான அறிவும் மட்டுமே.
அடுத்ததாக ‘மல்டிபிள் நாலேட்ஜ்’ இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசியவர், தான் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிக்ஸ் படித்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
9 பேரை ஒரு குரூப்பாகக் கொண்ட நாங்கள் ஒரு ஏர்கிராஃப்ட் டிசைனிங்கிற்கு ஒன்பது மாதத்திற்குள்ளாக பிராஜெக்ட் செய்தாக வேண்டும். இதில் எட்டாவது மாதம் முடிந்தபிறகு எங்கள் டிசைனிங்கை பார்த்த புரோஃபசர் நீங்கலாம் தேற மாட்டீங்கன்னு சொல்லிவிட்டு சென்றுவிட, நாங்கள் சோர்ந்துவிடவில்லை .ஏர்கிராஃப்ட் டிசைனிங்,மானேஜ்மென்ட்,இன்டெக்ரேஷன் என எல்லா பிரிவை சேர்ந்த மாணவர்களும் எங்கள் 9 பேரில் இருந்ததால் அடுத்த ஒன்றரை மாதத்திகுள் பிராஜெக்ட்டை முடித்து, தேற மாட்டோம் என திட்டிச் சென்ற அதே ஆசிரியர் எங்களைப் பார்த்து திறமையானவர்கள்னு சொல்ல செய்தோம்.
இதற்கு ஒரே காரணம் ஏர்கிராஃப்ட்டைப் பற்றி எங்கள் குழுவில் ஒவ்வொருவரும் ஒன்றைத் தெரிந்து வைத்திருந்தோம். எனவே பள்ளிகளிலும் ,கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு ஒரு எல்லை வைத்துக் கொள்ளக் கூடாது .இந்த மாணவர்களுக்கு இதைமட்டும் தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என இருப்பது அறிவாகாது.மெக்கானிக்கல் என்ஜீனியரிங் மாணவனுக்கு சிவில் என்ஜீனியரிங் பற்றியும் கொஞ்சம் அறிவாவது இருக்க வேண்டும்.வெறும் தியரியை மட்டும் முட்டி முட்டி படிக்க செய்யாமல் செய்முறை அறிவையும் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் சுயமாக,தங்களது வேலைக்காக ஒரு புராடக்ட் டிசைனிங் என வரும்போது பல்நோக்கு பார்வையுடன் செயல்பட முடியும் என்றவர், இறுதியாக ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டுமென தன் அனுபவத்தின் வாயிலாக தான் உணர்ந்த 11 விஷயங்களை படிக்க, அதை ஆசிரியர்களும் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர்.
அப்துல்கலாம் பார்வையில் நல்லாசிரியர்கள்:
*கடைநிலை மாணவனையும் கரையேற்ற வேண்டும்.
*சாதி, மதம், மொழி என விருப்பு ,வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
*ஒரு ஆசிரியராக மட்டுமின்றி நல்ல அம்மாவாகவும், அப்பாவாகவும், தங்கையாகவும் அன்பாக செயல்பட வேண்டும்.
*களிமண் பதத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனையும் ஒரு நல்ல சிலையாக செதுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணரவேண்டும்!
No comments:
Post a Comment